Parameshwara College Launching of Centenary Souvenir

பரமேஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை ஏற்பாட்டில், பேராசிரியர். திருமதி சுபதினி ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் ரி. பேரின்பநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பரமேஸ்வராக் கல்லூரி நூற்றாண்டு விழா சிறப்பு மலரை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வெளியிட்டு வைக்க யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி ச. முகுந்தன் மற்றும் சைவ சித்தாந்தத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் த. செல்வமனோகரன் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தினர்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடன ஆற்றுகையும், சேர். பொன். இராமநாதன் கட்புல ஆற்றுகைக் கலைகள் பீட மாணவிகளின் விசேட நாட்டிய, நடன நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

நிகழ்வில் சமயத் தலைவர்கள், பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.